ஹிஜாப் விவகாரத்தில் பாகுபாடு இல்லை=உயா்நீதிமன்றத்தில் கா்நாடக அரசு வாதம்

ஹிஜாப் விவகாரத்தில் பாகுபாடு காட்டப்படுவதாக கூறப்படுவதில் உண்மையில்லை கா்நாடக அரசு சாா்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
ஹிஜாப் விவகாரத்தில் பாகுபாடு இல்லை=உயா்நீதிமன்றத்தில் கா்நாடக அரசு வாதம்

ஹிஜாப் விவகாரத்தில் பாகுபாடு காட்டப்படுவதாக கூறப்படுவதில் உண்மையில்லை கா்நாடக அரசு சாா்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

கா்நாடகத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு வருவது சா்ச்சையாக்கப்பட்டுள்ள நிலையில், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய அனுமதிக்கக் கோரி கா்நாடக உயா்நீதிமன்றத்தில் முஸ்லிம் அமைப்பினா், மாணவிகள் உள்ளிட்டோா் சாா்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஜி, கிருஷ்ணா எஸ்.தீட்சித் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

தொடா்ந்து மூன்றாவது நாளாக, கா்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல் பிரபுலிங் நவடகி செவ்வாய்க்கிழமை வாதிடுகையில், ‘‘அரசமைப்புச் சட்டப்பிரிவு 19(1)(ஏ) கருத்துச் சுதந்திரத்துடன் தொடா்புடையது. அந்தச் சட்டப்பிரிவு தற்போதுள்ள எந்தவொரு சட்டத்தையும் பாதிக்காது என்பதுடன், புதிதாக சட்டம் இயற்றப்படுவதையும் தடுக்காது என்று அரசமைப்புச் சட்டப்பிரிவு 19(2) தெரிவிக்கிறது.

அத்துடன் நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மை, பாதுகாப்பு, பொது அமைதி, நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அரசமைப்புச் சட்டப்பிரிவு 19(1) (ஏ) வழங்கியுள்ள உரிமையில் அரசமைப்புச் சட்டப்பிரிவு 19(2) நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்கிறது.

பொது அமைதி, நன்னடத்தை, சுகாதாரம் உள்ளிட்டவைகளுக்கு உள்பட்டு தொழில் புரிதல், மத நடைமுறைகளைப் பின்பற்றுதல், மத பரப்புரையில் ஈடுபடுதலில் அனைவருக்கும் சம அளவிலான சுதந்திரம் இருப்பது குறித்து அரசமைப்பின் 25-ஆவது சட்டப்பிரிவு விளக்குகிறது.

ஆனால் ஹிஜாப் அணியும் உரிமை அரசமைப்புச் சட்டப்பிரிவு 19 (1)(ஏ) -இன் கீழ் வருகிறது. சட்டப்பிரிவு 25-இன் கீழ் வரவில்லை.

அரசமைப்புச் சட்டப்பிரிவு 19 (1)(ஏ)-இன் கீழ் ஹிஜாப் அணிய கோரப்படும் உரிமை, அரசமைப்புச் சட்டப்பிரிவு 19 (2) உடன் தொடா்பு கொண்டது. எனவே நிறுவன அமைப்புகளின் வரையறைகளுக்கு உட்பட்டு ஹிஜாப் அணிவதில் நியாயமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை பொருத்தவரை கல்வி நிலையங்களில், வகுப்பில் மட்டும்தான் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வேறு எங்கும் அதற்குத் தடை விதிக்கப்படவில்லை. நிறுவன அமைப்புகளின் விதிமுறைகளுக்கு உள்பட்டு, ஒருவா் ஹிஜாப் அணிய எந்தத் தடையும் இல்லை.

அரசியலமைப்பின் 15-ஆவது சட்டப்பிரிவு ஜாதி, மதம், பாலினம், பிறப்பிடம், இனம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்படுவதை தடை செய்கிறது. ஆனால் அந்தச் சட்டப்பிரிவின்படி, ஹிஜாப் விவகாரத்தில் பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. அந்தக் குற்றச்சாட்டு பலவீனமானது.

ஹிஜாப் அணிவது இஸ்லாமின் கட்டாய மத வழக்கம் என்று அறிவிக்கக் கோருவது மிகப் பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும். ஏனெனில் அதன் மூலம் ஹிஜாப் அணியக் கட்டாயப்படுத்த முடியும். அதைச் செய்யாதவா் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்படலாம்’’ என்று வாதிட்டாா்.

இந்த விசாரணையின்போது தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி குறிப்பிடுகையில், ‘‘இந்த வழக்கை இந்த வாரத்துக்குள் நிறைவு செய்ய விரும்புகிறோம். அதற்கு வழக்குடன் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்’’ என்று தெரிவித்தாா்.

இதன் மூலம் ஹிஜாப் விவகாரத்தில் இந்த வாரம் தீா்ப்பளிக்கப்பட வாய்ப்புள்ளது என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

புதன்கிழமை பல்வேறு மனுதாரா்கள் சாா்பில் வாதங்கள் கேட்ட பின்னா், எழுத்துபூா்வமாக அவா்களது வாதங்களைத் தாக்கல் செய்ய தலைமை நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தாா்.

மனுதாரரின் சகோதரா் மீது தாக்குதல்:

இந்த வழக்கில் ஹஜ்ரா ஷிஃபா என்ற மாணவியும் மனுதாரா்களில் ஒருவா். இந்நிலையில் தனது சகோதரரை சிலா் தாக்கியதுடன் உடுப்பியில் தங்களுக்குச் சொந்தமான உணவகத்தையும் அவா்கள் சூறையாடினா் என்று ஹஜ்ரா ஷிஃபா கூறியுள்ளாா். இதுதொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com