ராஜஸ்தான் மாநிலத்தில் பணியில் இருந்த ஓட்டுநர் ஒருவர் நொறுக்குத் தீனி வாங்க பயணிகள் ரயிலை நிறுத்திய விடியோ சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது.
பல்வேறு இடங்களில் பேருந்து, லாரி போன்ற கனரக வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் உணவுகளை தங்களுக்கு தேவையான கடைகளில் நிறுத்தி வாங்குவதை நாம் பாத்திருப்போம்.
அதுபோன்று ராஜஸ்தானில் ஓட்டுநர் ஒருவர் ரயிலை நிறுத்தி நொறுக்குத் தீனி வாங்கிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள விடியோவில், ரயில் தண்டவாளத்தின் அருகே கைகளில் கச்சோரியுடன் ஒருவர் நிற்கிறார். அவர் அருகே ரயிலை நிறுத்தி ரயிலில் இருந்த ஓட்டுநர் கீழே இருந்தவரிடம் கச்சோரியை பெற்றுக்கொண்டு மீண்டும் ரயிலை இயக்குகிறார்.
இது தொடர்பாக பேசிய ஜெய்ப்பூர் மண்டல ரயில்வே மேலாளர், ரயிலை நிறுத்தியது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு ஓட்டுநர்கள், கேன் மேன் இருவர் உள்பட 5 பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினார்.