கொல்கத்தாவில் 83 காவலர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இதேபோன்று புதியவகை கரோனாவான ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 1,892 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு தரப்பினர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொல்கத்தாவில் 83 காவலர்கள் இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், 47 பேர் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். 16 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதோடு மட்டுமல்லாமல், மருத்துவர்கள் மருத்துவமனை ஊழியர்கள் என 100-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று சிலிகுரியிலுள்ள வடக்கு மேற்கு வங்க மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 25 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
டிசம்பர் 28-ஆம் தேதி முதல் மேற்கு வங்கத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 19.59 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 20,186 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.