புதுச்சேரியில் நடைபெறவுள்ள தேசிய இளைஞர் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் வரும் புதன்கிழமை துவக்கி வைக்கிறார்.
வருகிற ஜனவரி 12 ஆம் தேதி மதுரை பொங்கல் விழாவில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவிருந்தார். அப்போது புதுச்சேரியில் நடைபெறும் இளைஞர் தின விழாவிலும் பிரதமர் கலந்துகொள்ளவிருப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஒமைக்ரான் பரவல் காரணமாக பிரதமர் கலந்துகொள்ளவிருந்த மதுரை நிகழ்வு ஒத்திவைப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, புதுச்சேரி நிகழ்வை புதன்கிழமை காலை 10.30 மணிக்கு காணொலி மூலம் துவக்கி வைத்து பிரதமர் உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.