நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,82,970 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 441 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தரவுகள் அடங்கிய தகவலை மத்திய சுகாதாரத் துறை இன்று (ஜன.19) வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக 2,82,970 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3,79,01,241-ஆக அதிகரித்துள்ளது.
இதனால் கரோனா தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 15.13 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 18,31,000 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பில் 4.83 சதவிகிதம் மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,88,157 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.55 கோடியாக அதிகரித்துள்ளது.
இதுவரை நாடு முழுவதும் 158 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.