மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் குறித்து முடிவெடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
ஒமைக்ரான் பரவல் காரணமாக நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, பொது இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை, 'கரோனா விதிகள் மற்றும் தளர்வு குறித்து மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பிறகு மாநில அரசு முடிவெடுக்கும்.
மாநிலத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்தாலும் மருத்துவமனைகளில் குறைவான எண்ணிக்கையிலே பாதிப்பு பதிவாகி வருகிறது. எனினும் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் கவனம் செலுத்த்த உத்தரவிடப்பட்டுள்ளது .
தற்போதைய சூழ்நிலையில் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றுவது மிகவும் இன்றியமையாதது. கட்டுப்பாடுகள் குறித்து நிபுணர் குழு ஆய்வு செய்து அறிக்கை அளித்த பின்னர் தளர்வுகள் குறித்து வெள்ளிக்கிழமை முடிவு செய்யப்படும்.
தடுப்பூசி செலுத்தும் பணி குறைவாக உள்ள இடங்களில் பணியை அதிகரிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கரோனா பாதிக்கப்பட்டவர்களில் 94% பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருப்பதால், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு மருத்துவ உதவிகளை சுகாதாரத் துறை வழங்கி வருகிறது.
பல்வேறு மாநிலங்களின் போக்கை மதிப்பாய்வு செய்த நிபுணர்கள் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் கரோனா பாதிப்பு உச்சமடையலாம் என்று கணித்துள்ளனர்' என்றார்.