கர்நாடகத்தில் வார இறுதி ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாகவும் அதேநேரத்தில் இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் பரவல் காரணமாக நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, பொது இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதையடுத்து கட்டுப்பாட்டு தளர்வுகள் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பிறகு மாநில அரசு முடிவெடுக்கும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியிருந்தார்.
அதன்படி, இன்று மருத்துவ மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுடனான ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனை முடிவுக்குப்பிறகு, கர்நாடகத்தில் வார இறுதி ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற 31 ஆம் தேதி வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.