குடியரசு நாள் விழாவையொட்டி தில்லி ராஜபாதையில் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலான அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது.
குடியரசு நாளையொட்டி தில்லி ராஜபாதையில் தேசியக் கொடியேற்றி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார். தில்லி ராஜபாதையில் தொடங்கி இந்தியா கேட் வரை அணிவகுப்பு நடைபெற்றது.
பின்னர் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. குடியரசு நாள் விழாவுக்காக தேர்வு செய்யப்பட்ட அலங்கார ஊர்திகள் ராஜபாதையில் வலம் வந்தன.
மேகாலயா, கோவா, சத்தீஸ்கர், உத்தரகண்ட், மகாராஷ்டிரம், அருணாசலப் பிரதேசம், கர்நாடகம் என 13 மாநிலங்களைச் சேர்ந்த 21 அலங்கார ஊர்திகள் ராஜபாதையில் அணிவகுத்து வந்தன.
இதில் பங்கேற்க தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டிருந்தது. அவை தமிழகத்தில் நடைபெற்ற குடியரசு நாளில் அணிவகுத்து வந்தன.
பெண்களின் முன்னேற்றத்திற்கு உதவிய தபால் துறை, ஜவுளித் துறை, நீர்வளத் துறை மத்திய அரசுத் துறைகளின் சாதனைகளை விளக்கும் வகையிலான அலங்கார ஊர்திகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
ராஜபாதையில் கலை நிகழ்ச்சிகள்
தில்லி ராஜபாதையில் குடியரசு நாள் விழாவையொட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பல்வேறு மாநிலங்களின் கலாசாரங்களை பறைசாற்றும் வகையில் உடையணிந்து நடனமாடியது பலரை வெகுவாகக் கவர்ந்தது.