சம்பல்: உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரங்கள் சூடுபிடித்திருக்கும் நிலையில், மற்றொரு பக்கம், கிராமங்களில் பிரசாரம் மேற்கொள்ளச் செல்லும் பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக மக்களின் போராட்டங்களும் சூடுபிடித்துள்ளன.
சம்பல் மாவட்டத்தில் அமைந்துள்ள அஸ்மோலி தொகுதிக்கு உள்பட்ட ஷகர்பூர் கிராமத்துக்கு பிரசாரம் மேற்கொள்ளச் சென்ற பாஜக வேட்பாளரும் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.
பாஜக வேட்பாளர் ஹரேந்திர சிங் ரிங்குவை, கிராம மக்கள் பிரசாரம் மேற்கொள்ள அனுமதிக்காமல் விரட்டியடித்ததும், காஸிப்பூர் எல்லையில் போராடிய விவசாயிகளுக்கு எதிராக பாஜக செய்த அனைத்தையும் கண்டித்து, மக்கள் கோஷங்கள் எழுப்பிய விடியோவில் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இதையும் படிக்க.. வெள்ளையா, கருப்பா, ஒல்லியா, குண்டா இருக்கோம்னு கவலையா?
லகிம்பூர் கேரி அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளைக் கலைந்து போகச் சொல்லி பாஜகவினர் சிலர் வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதையும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர்புகைக் குண்டுகளை வீசியதையும் மக்கள் காரசாரமாக விவாதித்து, பாஜக வேட்பாளரை விரட்டியடித்துள்ளனர். அங்கிருந்த மேலும் சில கிராம மக்கள், பாஜக வேட்பாளர்களை எங்கள் கிராமத்துக்குள் நுழையக் கூட அனுமதிக்க மாட்டோம் என்ற கோஷமிட்டதும் விடியோவில் பதிவாகியுள்ளது.
விவசாயிகளுக்கு பாஜக செய்ததை எப்போதும் மறக்க மாட்டோம் என்றும் சிலர் கூறியுள்ளார்கள்.
இந்த போராட்டங்கள் குறித்து தகவலிந்த வட்டாரங்கள் கூறுவது என்னவென்றால், பாஜக வேட்பாளர்களை விரட்டியடிப்போர் அனைவரும் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறுத.
இதேப்போன்று பாஜக வேட்பாளர்களை கிராம மக்கள் விரட்டியடிக்கும் நிகழ்வுகள் மேலும் பல தொகுதிகளுக்குள்பட்ட கிராமங்களிலும் நிகழ்கிறது.
முன்னதாக, பாஜக வேட்பாளர் மணீந்தர் பால சிங், மீரட்டில் உள்ள ஒரு கிராமத்துக்குச் சென்றபோது அவரது வாகனம் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு சம்பவத்தில் அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
முன்வார்பூர் கிராமத்துக்குச் சென்ற விக்ரம் சமி என்ற பாஜக வேட்பாளரை, கிராமத்துக்குள் நுழைய விடாமல் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து அவர் உடனடியாக காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த விடியோக்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம்பேரால் பரப்பப்பட்டு வருகிறது.