கான்பூர்: எதிர்க்கட்சியினரை கட்டையால், செருப்பால் அடியுங்கள். ஆனால் சுட்டுவிடாதீர்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பாஜக எம்எல்ஏ மகேஷ் திரிவேதி பேசியது விடியோவில் பதிவாகியுள்ளது.
கான்பூரின் கித்வாய் நகர் சட்டச்பேரவை எம்எல்ஏ மகேஷ் திரிவேதி, கூடியிருந்த பாஜக தொண்டர்களிடம், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பேச்சு விடியோவா பதிவாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
அந்த விடியோவில், நமது எதிராளிகளை, முடிந்தமட்டும் தாக்குங்கள். தடியால் அடியுங்கள், செருப்பால் தாக்குங்கள் என்று கத்துகிறார். இதனை அவர் திரும்பத் திரும்ப சொல்லியதோடு, பெரிய மனது வைத்து மற்றொன்றையும் சொல்கிறார். அதாவது, தாக்குங்கள் ஆனால் சுட்டுவிடாதீர்கள், மற்றவற்றை நாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று பேசியிருக்கும் விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையெல்லாம் தாண்டி, அவர் அந்த விடியோவில் இறுதியில் கூறியிருப்பதுதான் மிகவும் வைரலாகியுள்ளது. "நமது எதிரிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக இங்கிருக்கும் காங்கிரஸ்காரர்களை. நம்மைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நமது ராணுவம், நமது கொள்கை, நமது அமைப்பை ஒன்றாக உள்ளது. ஆனால் அவர்களை சுட்டுவிட வேண்டாம். அவர்களை எல்லா விதத்திலும் நாம் ஒரு கை பார்ப்போம்" என்று கூறியுள்ளார்.
இந்த விடியோவில் தான் கூறியிருப்பதை ஒப்புக் கொண்ட மகேஷ் திரிவேதி, எதிரிகள் நம்மை தடியால் தாக்கினால், நாமும் அப்படியே செய்வோம் என்ற அர்த்தத்தில்தான் நான் பேசியுள்ளேன் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.