காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதையொட்டி கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
பாஜக சார்பில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் தரப்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று நொய்டாவில் தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார். நொய்டாவில் காங்கிரஸ்வ வேட்பாளர் பன்குரி பதக் என்பவருக்கு ஆதரவாக வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபடுகிறார்.
நாளை தாத்ரி தொகுதியில் பிரசாரம் மேற்கொள்வார் என்றும் பிரசாரத்தின் இடையே பல்வேறு சமூக மக்களையும் சந்தித்துப் பேசவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.