தங்க கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது விரிவான விசாரணை நடத்தக் கோரி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கேரளம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிச் சென்றனர். அதேபோல தலைமைச் செயலகம் நோக்கியும் போராட்டக்காரர்கள் அணி வகுத்தனர்.
கேரளத்தின் பல மாவட்டங்களிலும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் போது கேரள முதல்வர் பினராயி விஜயன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். மேலும், இந்த வழக்கில் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது விரிவான விசாரணை நடத்தக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தினை தலைமையேற்று நடத்திய சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், இந்த தங்க கடத்தல் விவகாரத்தில் தனது மீதான குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு பதிலளிக்காமல் தங்களது அரசுக்கு பாதிப்பு ஏற்படாமல் செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கூறியதாவது: “ இந்த தங்க கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயன் மீது சில குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. நாங்கள் சட்டப்பேரவையிலும், சட்டப்பேரவைக்கு வெளியிலும் பல கேள்விளை அவரிடம் எழுப்பினோம். இருப்பினும், அவரிடமிருந்தும் மற்றும் அவரின் கட்சி சார்பாகவும் எந்த ஒரு தெளிவான பதிலும் கொடுக்கப்படவில்லை. நாங்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் முதல்வர் பினராயி விஜயன் பதிலளித்து ஆக வேண்டும். முதல்வர் எங்களது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் எங்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடுகிறார்.” என தெரிவித்தார்.
மற்றொரு மூத்த தலைவரான ரமேஷ் சென்னித்தலா கேரளத்தின் கொல்லத்தில் போராட்டத்தினை வழிநடத்திச் சென்றார். அப்போது அவர், முதல்வர் பினராயி விஜயன் மீது தவறு இல்லையெனில் அவர் ஏன் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் மீது அவமதிப்பு வழக்கு தொடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.