கரோனா பேராபத்துக் காலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தினை சந்தித்ததை நான் பார்த்தேன். அவர்களுக்கு இந்த ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மிகவும் உதவிகரமாக இருந்துள்ளது. கரோனா காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்தத் திட்டம் குறித்து எதுவும் பேசவில்லை. அதேபோல இந்தத் திட்டத்தின் நன்மைகள் குறித்து இனிவரும் காலங்களிலும் அவர் பேசப்போவதில்லை. ஏனென்றால், பிரதமர் இந்த திட்டத்தினை தோல்வியின் நினைவுச்சின்னம் என விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான அரசு இந்த திட்டத்தினை கொண்டுவர முயற்சி செய்தபோது அதற்கு எதிராக பல தடைகள் வந்தன. காங்கிரஸின் இந்த திட்டத்தின் மூலம் அரசுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படப் போகிறது என விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், இந்தத் திட்டத்தின் நோக்கம் நாட்டினை கட்டமைப்பது, மக்களின் நலனைக் காப்பதாகும்.