மக்களை காப்பாற்றிய காங்கிரஸின் திட்டத்தை ஒப்புக்கொள்ள மறுக்கும் பிரதமர்: ராகுல் காந்தி

கரோனா காலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் லட்சக்கணக்கான மக்களை காப்பற்றியுள்ளது என்பதை பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக்கொள்ளவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரி்வித்தார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

கரோனா பேராபத்துக் காலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் லட்சக்கணக்கான மக்களை காப்பற்றியுள்ளது என்பதை பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக்கொள்ளவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 2005ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:  “ மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தினை பிரதமர் நரேந்திர மோடி தோல்வியின் நினைவுச்சின்னம் என விமர்சித்தார். பிரதமர் இந்த மிகப் பெரிய வேலைவாய்ப்புத் திட்டத்தின் ஆழத்தை புரிந்து கொள்ளவில்லை. அதேபோல லட்சக்கணக்கான மக்களுக்கான வேலைவாய்ப்பினை இந்தத் திட்டம் அதிகரித்துள்ளது என்பதையும் அவர் உணரவில்லை. 

நாட்டின் பொருளாதார நிலை, பணமதிப்பிழப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தினை அவசரகதியாக அறிமுகப்படுத்தியதால் மிகவும் மோசமான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த சூழலில் காங்கிரஸின் இந்த வேலைவாய்ப்புத் திட்டம் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்துள்ளது.

கரோனா பேராபத்துக் காலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தினை சந்தித்ததை நான் பார்த்தேன். அவர்களுக்கு இந்த ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மிகவும் உதவிகரமாக இருந்துள்ளது. கரோனா காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்தத் திட்டம் குறித்து எதுவும் பேசவில்லை. அதேபோல இந்தத் திட்டத்தின் நன்மைகள் குறித்து இனிவரும் காலங்களிலும் அவர் பேசப்போவதில்லை. ஏனென்றால், பிரதமர் இந்த திட்டத்தினை தோல்வியின் நினைவுச்சின்னம் என விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான அரசு இந்த திட்டத்தினை கொண்டுவர முயற்சி செய்தபோது அதற்கு எதிராக பல தடைகள் வந்தன. காங்கிரஸின் இந்த திட்டத்தின் மூலம் அரசுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படப் போகிறது என விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், இந்தத் திட்டத்தின் நோக்கம் நாட்டினை கட்டமைப்பது, மக்களின் நலனைக் காப்பதாகும். 

ஊடகங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கிரிக்கெட், ஹாலிவுட் பற்றி பேசும் ஊடகங்கள் இந்த சாதாரண மக்கள் செய்யும் சிறந்த வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்தத் திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்கள் தங்களுக்கு வழங்கும் வேலை நாட்களின் எண்ணிக்கையை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களது இந்த வேண்டுகோளை ஏற்று வேலை நாட்களை அரசு அதிகரிக்க வேண்டும். அதேபோல அவர்களது தினசரி ஊதியத்தை ரூ.400 ஆக அதிகரிக்க வேண்டும்” என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com