பஞ்சாபில் அமைச்சரவையை மேலும் விரிவாக்க முதல்வர் பகவந்த் மான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பஞ்சாப் மாநிலத்தில் இந்தாண்டு நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைத்துள்ளது. மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவை தொகுதிகளில் 92 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
இதையும் படிக்க | உதய்பூர் தையல்காரரைக் கொன்றவர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவரா?
ஆம் ஆத்மியின் அமைச்சரவையில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் 9 பேர் அமைச்சர்களாக உள்ளனர். பஞ்சாப் அமைச்சரவையில் முதல்வர் உள்பட 18 பேர் வரை அமைச்சர்களாக நியமிக்க வரம்பு உள்ளது.
இந்நிலையில் அமைச்சரவையை மேலும் விரிவாக்கம் செய்ய முதல்வர் பகவந்த் மான் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிர்வாகப் பணிகளை மேலும் துரிதப்படுத்த அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி மேலும் 5 பேரை அமைச்சர்களாக நியமிக்க உள்ளதாகவும் அவர்களில் பெண் ஒருவரும் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. இதற்கான அறிவிப்பை விரைவில் முதல்வர் பகவந்த் மான் வெளியிடுவார் எனத் தெரிகிறது.