சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்களிடமிருந்து தனக்கும் அழைப்பு வந்ததாகவும் ஆனால் அதனை நிராகரித்துவிட்டதாகவும் சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.
சிவசேனை கட்சியின் மூத்த அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் அக்கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில், பாஜக ஆதரவுடன் மகாராஷ்டிர முதல்வராக நேற்று பதவியேற்றுள்ளார். பாஜக மூத்தத் தலைவரான தேவேந்திர ஃபட்னவீஸ் துணை முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.
இதையடுத்து, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ரௌத்,
நான் நம்பிக்கையுடன்தான் அமலாக்கத்துறை விசாரணைக்குச் சென்றேன். ஏனெனில் என் மேல் எந்தத் தவறும் இல்லை. குவாஹாட்டியில் சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்களிடம் இருந்து எனக்கும் அழைப்பு வந்தது. ஆனால், நான் அதனை ஏற்கவில்லை. பாளாசாஹேப்பின் விசுவாசி நான்.
மேலும் ஏக்நாத் ஷிண்டே சிவசேனையின் முதல்வர் அல்ல. உத்தவ் தாக்கரே இதுகுறித்து விளக்கமளித்துவிட்டார். உத்தவ் தாக்கரேவுடன் இருப்பவர்கள்தான் சிவசேனை கட்சியினர். சிவசேனையை பலவீனப்படுத்த பாஜகவின் முயற்சி இது' என்று குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | மகாராஷ்டிரம்: ஷிண்டே அரசு மீது 4-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு