கல்வியைப் பொறுத்தவரை வயது ஒரு தடையல்ல என்பதை 53 வயதான ஷீலா ராணி தாஸ் நிரூபித்துள்ளார்.
திரிபுராவில் ஷீலா ராணி தனது இரண்டு மகள்களுடன் சேர்ந்து பொதுத்தேர்வை எழுதி அதில் தேர்ச்சியும் பெற்றுள்ளார். ஷீலா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வையும், அதே நேரத்தில் அவரது இரண்டு மகள்களும் 12-ம் பொதுத்தேர்வையும் எழுதி தேர்ச்சியடைந்துள்ளனர்.
திரிபுரா கல்வி வாரியம் நேற்று 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டதால் மும்மடங்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஷீலா தாஸ் இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டு, அவரது கணவரை இழந்தவர். இதனால் இவர் படிக்கும் முயற்சியைக் கைவிட்டார். பின்னர், தனது இரண்டு மகள்களையும் தனியாக வளர்த்து ஆளாக்கினார்.
இதையும் படிக்கலாம்: சென்னையில் முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு அனுமதி மறுப்பு
பல ஆண்டுகளுக்குப் பிறகு, தனது இரண்டு மகள்களும் தங்கள் தாயை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும்படி வற்புறுத்தினர். அதைத் தொடர்ந்து ஷீலா தனது மகள்களின் வழிகாட்டுதலின்படி தேர்வுக்குத் தயாரானார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஷீலா கூறுகையில்,
நான் தேர்வில் தேர்ச்சி பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது மகள்களும் மற்றவர்களும் தேர்வெழுத என்னை ஊக்கப்படுத்தினர். நான் தேர்வில் தேர்ச்சியடைவேன் என்று முழு நம்பிக்கையுடன் இருந்தேன் என்றார்.
அகர்தலாவின் அபோய்நகர் ஸ்மிருதி வித்யாலயாவில் ஷீலா 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். அதேபோன்று அவரது மகள்கள் அகர்தலாவில் உள்ள பானி வித்யாபீத் வித்யாலயாவில் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.
ஷீலாவின் மகள்கள் கூறுகையில்,
எங்கள் அம்மா 10ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றதால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், நானும் என் சகோதரியும் 12ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றோம். இருவரும் என் தாயை ஊக்குவித்தோம், அவரது படிப்பிற்கும் உதவினோம் என்றனர்.