மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் கடன் தற்போது ரூ.139 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டின் கடன், வேலைவாய்ப்பின்மை, ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஏற்பட்டுள்ள சரிவு குறித்த புள்ளிவிவரங்களை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது இருந்த நிலையையும், தற்போதைய நிலையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டில் ரூ.56 லட்சம் கோடியாக இருந்த நாட்டின் கடன் தற்போது ரூ.139 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பதாகவும், இதனால் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கான கடன் 2014 இல் ரூ. 44,348 இருந்த நிலையில், அது தற்போது ரூ.1,01,048 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, 2014 இல் 4.7 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை, தற்போது 7.8 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | பிரிட்டன் பிரதமா் பதவிக்கு போட்டி: வரலாறு காணாத பன்முகத்தன்மை!
2014 இல் ரூ.410 ஆக இருந்த சமையல் எரிவாயு உருளை ஒன்றின் விலை தற்போது ரூ.1,053 ஆக உயர்ந்துள்ளது.
2014 இல் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.59 ஆக இருந்த நிலையில், அது தற்போது ரூ.80 ஆக உள்ளது.
135 பில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதி-இறக்குமதி இடையேயான வர்த்தக பற்றாக்குறை, தற்போது 190 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சியின் பெரும் பின்னடைவுக்கு ஆட்சியாளர்களின் கர்வமே காரணம் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.