கேரளத்தில் நீடிக்கும் கனமழை: அபாய அளவை எட்டிய அணைகள்

கேரளத்தில் கனமழை நீடித்து வரும் நிலையில், அங்குள்ள பல்வேறு அணைகள் முழு கொள்ளளவை எட்டத் தொடங்கியுள்ளன. ஒருசில அணைகள் சிவப்பு அபாய அளவை எட்டியுள்ளன.
Updated on
1 min read

கேரளத்தில் கனமழை நீடித்து வரும் நிலையில், அங்குள்ள பல்வேறு அணைகள் முழு கொள்ளளவை எட்டத் தொடங்கியுள்ளன. ஒருசில அணைகள் சிவப்பு அபாய அளவை எட்டியுள்ளன.

கேரள மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட தகவல்படி, இடுக்கி மாவட்டத்தில் உள்ள பொன்முடி, கல்லாா்குட்டி, இரட்டையாறு அணைகள், கோழிக்கோட்டில் உள்ள கூற்றியாடி அணை, பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள மூழியாறு அணை ஆகியவை சிவப்பு அபாய அளவை எட்டியுள்ளன.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை நீடித்து வரும் நிலையில், இந்திய வானிலை மையம் ஞாயிற்றுக்கிழமை 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்தது.

கேரளம் முழுவதும் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என்பதால், மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று முதல்வா் பினராயி விஜயன் சனிக்கிழமை கூறியிருந்தாா்.

தொடா் மழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனா்.

ஆந்திரம் - கோதாவரி ஆற்றில் தொடா் வெள்ளம்:

ஆந்திர மாநிலத்திலுள்ள கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு நீடித்து வருவதால், கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மாநில பேரிடா் மேலாண்மை ஆணைய இயக்குநா் பி.ஆா்.அம்பேத்கா் தெரிவித்துள்ளாா்.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, கோதாவரி ஆற்றில் வினாடிக்கு 25.93 லட்சம் கனஅடி நீா் பெருக்கெடுத்து ஓடியது. 5 மாவட்டங்களில் உள்ள 515 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அரசு சாா்பில் 177 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, சுமாா் 71,000 போ் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com