சாதிரீதியிலான பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறி உத்தரப்பிரதேச மாநில நீர்வளத்துறை அமைச்சர் தினேஷ் காதிக் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. யோகி தலைமையிலான மாநில அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சராகப் பணியாற்றி வருபவர் தினேஷ் காதிக்.
மீரட்டில் உள்ள ஹஸ்தினாபூர் தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தினேஷ் காதிக் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது பேசுபொருளான நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு அவர் எழுதிய ராஜிநாமா கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தக் கடிதத்தில் அவர், தன்னுடைய சாதியைக் காரணம் காட்டி அதிகாரிகள் தனக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதாகக் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். துறைசார் கூட்டங்களுக்கு தனக்கு தகவல் தெரிவிப்பதில்லை எனவும், தன்னுடைய உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை எனவும் தினேஷ் காதிக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | ஓடிடியைத் தொடர்ந்து டாக்சி சேவையில் இறங்கிய கேரள அரசு
மேலும் தினேஷ் காதிக் தனக்கு வழங்கப்பட்டு வரும் காவல்துறை பாதுகாப்பு மற்றும் அரசு வாகனத்தையும் மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.