லக்னௌ: துபையில் இருந்து ரூ. 20 லட்சத்து 54 ஆயிரம் மதிப்புள்ள துப்பாக்கிகள், தொலைநோக்கிகளை கடத்தி வந்த ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததுடன், அவரிடம் இருந்த கடத்தல் பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.
துபையில் இருந்து வரும் விமானத்தில் துப்பாக்கிகள் மற்றும் தொலைநோக்கிகள் பெருமளவில் கடத்தி வருவதாக லக்னௌ சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சுங்கத்துறை அதிகாரிகள், துபையில் இருந்து வந்த விமான பயணிகளை தீவிரமாக பரிசோதித்தனர்.
அப்போது, சுங்கத் துறைக்கு எந்த அறிவிப்பும் இல்லாமல் கிரீன் சேனல் வழியாக செல்ல முயன்ற பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது "அவரது பைகளில் 10 துப்பாக்கிகள், ஆயுதங்களில் பொருத்தக்கூடிய தொலைநோக்கிகள் மற்றும் பிற ஆயுத பாகங்களை பறிமுதல் செய்தனர்.
அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவரிடம் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் இருந்த ரூ. 20 லட்சத்து 54 ஆயிரம் மதிப்புள்ள துப்பாக்கிகள், தொலைநோக்கிகள் மற்றும் பிற ஆயுதங்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
பின்னர், அவரை லக்னௌ பொருளாதார குற்றவியல் தலைமை நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்றக் காவலில் எடுத்து மேலதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.