ஏற்றுமதி பெட்ரோல் மீதான சந்தை ஆதாய வரி ரத்து; டீசல், உள்நாட்டு கச்சா எண்ணெய் மீதான வரி குறைப்பு

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல் மீதான சந்தை ஆதாய வரியை (வின்ட்ஃபால் டாக்ஸ்) மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல் மீதான சந்தை ஆதாய வரியை (வின்ட்ஃபால் டாக்ஸ்) மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

டீசல், விமான எரிபொருள், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்ட வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

மத்திய நிதியமைச்சகம் கடந்த 1-ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல், விமான எரிபொருள் மீது லிட்டருக்கு தலா 6 ரூபாயும், டீசல் மீது லிட்டருக்கு 13 ரூபாயும் வரி விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது டன்னுக்கு ரூ.23,250 வரி விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், வரியை ரத்து செய்தும், வரியைக் குறைத்தும் புதிய அறிவிக்கை ஒன்றை நிதியமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல் மீது விதிக்கப்பட்டிருந்த வரி லிட்டருக்கு ரூ.6 ரத்து செய்யப்படுகிறது. டீசல், விமான எரிபொருள் மீதான வரி லிட்டருக்கு தலா ரூ.2 குறைக்கப்பட்டு முறையே ரூ.11, ரூ.4-ஆக உள்ளது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான வரி டன்னுக்கு ரூ.23,250-இல் இருந்து ரூ.17,000-ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளதால், ஓஎன்ஜிசி, வேதாந்தா போன்ற நிறுவனங்கள் பலனடையும். இதேபோல், குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் இரு சுத்திகரிப்பு நிலையங்களை நடத்திவரும் ரிலையன்ஸ் நிறுவனமும் பயன்பெறும்.

ரஷியா மீதான உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகள் காரணமாக, அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெயை குறைந்த விலைக்குப் பெற்று, சுத்திகரிப்பு செய்து பெட்ரோல், டீசலாக ஐரோப்பிய நாடுகளுக்கு தனியாா் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்து வந்தன. அதனால், அந்நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டின.

அதுமட்டுமில்லாமல், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட சில பகுதிகளில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு காணப்பட்ட நிலையிலும், தனியாா் நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவே முன்னுரிமை அளித்தன. இதையடுத்து, உள்நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டைக் குறைக்கும் நோக்கத்தில் வரி விதிக்கப்பட்டது. இந்த வரிவிதிப்பு, 15 நாள்களுக்கு ஒருமுறை சா்வதேச சூழலின் அடிப்படையில் மறுஆய்வு செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com