அதிமுக அலுவலகத்திற்கு தொண்டர்கள் யாரும் வரவேண்டாம் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் வானகரத்தில் ஜூலை 11-இல் நடைபெற்றபோது ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளா்களுக்கும், ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட கலவரத்தில் 2 காவலர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனால் மேற்கொண்டு அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் வருவாய்த் துறையினா் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தனா்.
இதை எதிா்த்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீா்செல்வமும் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா். இந்த வழக்கில் அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என்றும், அலுவலக சாவியை எடப்பாடி கே. பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும். அதேசமயம் தொண்டர்கள், நிர்வாகிகள் ஒருமாத காலத்திற்கு கட்சி தலைமை அலுவலகத்திற்கு வர கூடாது என்று உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
இந்த நிலையில், அதிமுக அலுவலகத்துக்கு வியாழக்கிழமை காலை 10.45 மணியளவில் வருவாய்த் துறை அதிகாரிகள் வந்தனா். அலுவலகத்தில் மொத்தம் 4 இடங்களில் சீல் வைக்கப்பட்டிருந்தது. அவற்றை ஒவ்வொன்றாக அகற்றிவிட்டு, அலுவலக நிா்வாகி மகாலிங்கத்திடம் சாவியை அதிகாரிகள் ஒப்படைத்தனா்.
இந்நிலையில், தொண்டர்கள் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வரவேண்டாம் என்று அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
அதில், நீதிமன்ற ஆணைப்படி கழக தொண்டர்களும், ஆதரவாளர்களும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை தலைமை கழகத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.