உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் 18வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒரேகான் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் இறுதி பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, ரோஹித் யாதவ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இன்று இறுதி ஆட்டம் நடைபெற்ற நிலையில், நான்காவது முயற்சியில் 88.13 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதனால் வெள்ளிப்பதக்கத்தை நீரஜ் தன்வசப்படுத்தினார்.
இதனிடையே பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், இது திறமையான வீரர் மூலம் கிடைத்த சிறப்பான வெற்றி. உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு எனது வாழ்த்துகள். விளையாட்டுத் துறையில் இந்தியாவுக்கு இது சிறப்பான தருணம். நீரஜ் சோப்ராவின் எதிர்காலம் சிறக்க வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.