
ஜார்க்கண்டில் 16 வயது பெண் கடத்தல்; 3 மாதங்களாக கூட்டு பாலியல் பலாத்காரம்
பொகாரோ: பள்ளியில் 9ஆம் வகுப்புப் படித்து வந்த 16 வயது பெண் கடத்தப்பட்டு, பூட்டிய அறைக்குள் மூன்று பேரால் கடந்த 3 மாதங்களாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குற்றவாளிகள் மந்தோஷ், விஷ்ணு குமார் மற்றும் மனோஜ் குமார் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். இவர்கள் யாரையும் தனக்குத் தெரியாது என்று அப்பெண் கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி, மாணவி காணாமல் போனது தொடர்பாக அவரது குடும்பத்தினர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்து தொடர்ந்து தேடும் பணியையும் நடத்தியுள்ளனர்.
காவல்துறையினர் இதில் பெரிய ஆர்வம் காட்டாமல், மாணவியே திரும்பி வருவார் அது வரை காத்திருக்குமாறு பெற்றோரிடம் கூறியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை டிஎஸ்பி கூறுகையில், பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறோம். பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட பிறகு அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பெண்ணின் பெற்றோர் கூறுகையில், ஏப்ரல் 19ஆம் தேதி கடைக்குச் சென்ற பெண்ணை மூன்று பேர் வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஒரு பகுதியிலிருந்த வீட்டுக்குள் அடைத்து வைத்துள்ளனர்.
மூன்று பேரும் பாலியல் பலாத்காரம் செய்ததும், அவர்கள் வெளியே செல்லும் போது பெண்ணின் வாய் மற்றும் கையை துணியால் கட்டிவிட்டுச் சென்றுள்ளனர். ஜூலை 19ஆம் தேதி, அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண் இதனை கவனித்து வந்து, வீட்டைத் திறந்து பெண்ணை காப்பாற்றியுள்ளார்.
பாதிக்கப்பட்டப் பெண் அங்கிருந்து தப்பி, பெற்றோரிடம் வந்துள்ளார். உடனடியாக அவர்கள் காவல்நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர்.