குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குறித்துப் பேசியதற்கு ஆதிர் ரஞ்சன் சௌத்ரி மன்னிப்பு கேட்டுவிட்டதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குறித்து காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக சௌத்ரியும் காங்கிரஸ் கட்சியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி பாஜக எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.
ஆதிர் ரஞ்சன் சௌத்ரி பேசியதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, 'அவர் ஏற்கெனவே மன்னிப்பு கேட்டுவிட்டார்' என்று கூறினார்.
ஆனால், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ' நான் வாய் தவறி பேசியதால், மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. தவறுதலாக கூறிவிட்டேன். பாஜகவினர் தேவையற்ற சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்' என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவரும் சம்மந்தப்பட்ட எம்.பியும் வேறு வேறு பதில்களை அளித்திருப்பது குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | பாஜக எம்.பி.க்களின் முழக்கத்தால் முடங்கியது நாடாளுமன்றம்