இந்திய ரூபாய் நோட்டுகளில் ரவீந்திரநாத் தாகூா், அப்துல் கலாம் ஆகியோரது படங்களுடன் வெளியிட பரிசீலித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.
ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படம் மட்டுமே இடம்பெறுவது வழக்கம். இப்போது முதல்முறையாக தேசத் தலைவா்கள் பிறரின் படத்தையும் ரூபாய் நோட்டில் பயன்படுத்த பரிசீலிக்கப்படுகிறது. அதே நேரத்தில் வழக்கமான இடத்தில் மகாத்மா காந்தியின் படம் இருக்கும்.
ரூபாய் நோட்டில் மறைவாகத் தெரியும் வகையில் (வாட்டா் மாா்க்) மகாத்மாவின் படம் இடம்பெறுவது வழக்கம். இப்போது அந்த இடத்தில் வங்கக் கவிஞா் தாகூா், தமிழகத்தைச் சோ்ந்த விஞ்ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் ஆகியோரது படங்களை வெளியிட பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.
இதையும் படிக்க | நார்வே செஸ்: கார்ல்சனை மீண்டும் தோற்கடித்த விஸ்வநாதன் ஆனந்த்
மேலும், ‘வாட்டா் மாா்க்’ படங்களை சிறப்பாகத் தோ்வு செய்து இறுதி ஒப்புதலுக்காக அரசுக்குப் பரிசீலிக்கும் தில்லி ஐஐடி பேராசிரியா் திலீப் டி.சஹானிக்கு இரு தலைவர்களின் வாட்டர் மார்க்கை மத்திய நிதித்துறை அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி பொது மேலாளர் யோகேஷ் டயால் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மகாத்மா காந்தி படத்திற்கு பதிலாக பிற தலைவர்களின் படத்தை ரூபாய் நோட்டுகளில் வைக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுபோன்ற எந்தவொரு திட்டமும் ரிசர்வ் வங்கியிடம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.