
பப்ஜி விளையாட தடை போட்ட தாய்க்கு நேர்ந்த கதி: அதுவும் ராணுவ வீரரின் வீட்டில்
லக்னௌ: பப்ஜி விளையாட ரூ.10 ஆயிரம் தர மறுத்ததால், வீட்டிலிருந்த கைத்துப்பாக்கியால் தாயைக் கொன்ற 17 சிறுவனைப் பற்றிய செய்தி கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பப்ஜி விளையாட்டின் அடுத்தக் கட்டத்துக்குச் செல்ல ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று, அதற்காக தாயிடம் பணம் கேட்டுள்ளார் சிறுவன். ஆனால் அதனைக் கொடுக்க தாய் மறுத்துவிட்டார்.
இதையும் படிக்க.. அதிகம்பேர் வைத்திருக்கும் பாஸ்வேர்டு: உங்களுடையதும் இருக்கிறதா பாருங்கள்?
இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், தனது தந்தையின் உரிமம் பெற்ற கைத் துப்பாக்கியை எடுத்து, உறங்கிக் கொண்டிருந்த தாயை சுட்டுக் கொன்றுள்ளார்.
அது மட்டுமல்ல தாயுடன் இருந்த 10 வயது சகோதரியையும் சுட்டுக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டி, தாயைப் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டியுள்ளார்.
தாயின் உடலை அறைக்குள் இழுத்துச் சென்று அறையின் வெப்பநிலையை மிகக் குறைவாக வைத்துவிட்டு, 48 மணி நேரம் தாயின் உடலை வைத்திருந்துள்ளார். தனது நண்பர்களை வீட்டுக்கு வரவழைத்து விருந்து கொடுத்து கேளிக்கையிலும் ஈடுபட்டுள்ளார்.
வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவது தொடர்பாக பக்கத்து வீட்டுக்காரர், காவல்நிலையத்தில் புகார் கொடுத்த போதுதான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் பணியிலிருந்த ராணுவ வீரருக்கு, அவரது மனைவியை மகன் சுட்டுக் கொன்றது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
உடற்கூராய்வில், சிறுவன், தாய்க்கு மிக அருகே நின்று கொண்டு நெற்றியில் சுட்டிருப்பதாகக் கூறியுள்ளனர்.