போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபலில் இயங்கும் மிகப்பெரிய அரசு மருத்துவமனையான ஹமிடியா மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மீது 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தையே உலுக்கியிருக்கும் இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்துமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மனித உரிமைகள் ஆணையமும், இந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு சுகாதாரத் துறை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மாநில மருத்துவக் கல்வித் துறை அமைச்சரும், ஹமிடியா மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் மீது பாலியல் புகார் வந்திருப்பதை உறுதி செய்துள்ளார். இந்த சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்து, அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
மருத்துவமனை தரப்பில் இது குறித்துக் கூறுகையில், டாக்டர் தீபக் மீது, 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பாலியல் புகார் கூறியிருப்பதாகவும், குறிப்பாக இரவுப் பணியின்போது அவர் பாலியல் துன்புறுத்தல்களை அளிப்பதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.