ஜார்க்கண்டில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கைதி அழைத்து வரப்பட்டபோது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம், பிஹ்தாவிலிருந்து அமித் குமார் சிங் என்ற கைதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக இன்று ஜார்க்கண்ட் மாநிலம் அழைத்து வரப்பட்டார். தியோகர் மாவட்டத்தில் உள்ள சிவில் நீதிமன்ற வளாகம் அருகே கைதியை அழைத்து வந்தபோது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், கைதி அமித் குமாரை நோக்கி சரமாரியாக சுட்டனர்.
இதையும் படிக்க- வங்கதேசத்தில் கடும் வெள்ளப் பெருக்கு: 25 பேர் பலியான சோகம்
இதைத்தொடர்ந்து அவர்கள் தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவத்தில் கைதி அமித் குமார் மீது 3 தோட்டாக்கள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அமித் குமார் சடலத்தை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே இந்த சம்பவம் நடந்ததாக தியோகர் காவல்துறை கண்காணிப்பாளர் சுபாஷ் சந்திர ஜாட் தெரிவித்தார்.