அக்னி வீரர்களின் எதிர்காலம் மிகவும் பாதுகாப்பானது என்றும் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை என்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், 'அக்னிபத்' திட்டம் குறித்து பேசினார்.
அப்போது அவர், 'அக்னிபத் என்பது ஒரு தனியான திட்டம் அல்ல. அதை சரியான கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். 2014ல் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும், இந்தியாவை எப்படி பாதுகாப்பாகவும் வலிமையாகவும் மாற்றுவது என்பதுதான் அவரது முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்று. அதற்கு பல வழிகளும் பல படிகளும் தேவை.
போரில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. நாம் தொடர்பு இல்லாத, கண்ணுக்கு தெரியாத போரைச் நோக்கிச் செல்கிறோம். தொழில்நுட்பம் அதிவேகத்தில் வளர்ந்து வருகிறது. நாளைக்காக நாம் தயாராக வேண்டும் என்றால், நாம் மாற வேண்டும்.
அக்னி வீரர்களால் ஒரு முழு ராணுவத்தை உருவாக்க முடியாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் அவர்கள் திறன் பயிற்சிகளை பெறுவார்கள்.
மேலும் நாட்டின் பாதுகாப்பு என்பது மாறக்கூடியது. அது நிலையானதாக இருக்க முடியாது. அது நமது தேசிய நலன் மற்றும் தேசிய சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய சூழலுடன் தொடர்புடையது. அதற்கு உபகரணங்கள் தேவை, கட்டமைப்பு, தொழில்நுட்பம், மனிதவளக் கொள்கைகளில் மாற்றம் தேவை என்று பேசியுள்ளார்.
இதையும் படிக்க | அக்னிபத் திட்டம்: உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்