'உத்தவ் தாக்கரேவும் ஹோட்டலுக்கு வரலாம்' - அசாம் முதல்வர் கிண்டல் பேச்சு!
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவும் விடுமுறைக் காலத்தைக் கழிக்க அசாம் ஹோட்டலுக்கு வர வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் இணைந்த 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவசேனை கட்சியின் மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களுடன் அசாம் மாநிலம் குவாஹாத்தியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளனர்.
தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தரப்பு ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மகாராஷ்டிர அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
மகா விகாஸ் கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என ஷிண்டே தரப்பு கூற, நேரில் வந்து ஆலோசனை நடத்தினால் கூட்டணியிலிருந்து விலகத் தயார் என உத்தவ் தரப்பு கூறுகிறது.
இதையும் படிக்க | 50 எம்எல்ஏக்களுடன் ஏக்நாத் ஷிண்டே?
இதனிடையே பாஜக தலைவர்கள் பலரும் அசாமில் தங்கியிருக்கும் அதிருப்தி எம்எல்ஏக்களை அவ்வப்போது சந்தித்து பேசி வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, 'அசாமில் சிறந்த உள்கட்டமைப்புடன் கூடிய தரமான ஹோட்டல்கள் உள்ளன. தற்போது எம்எல்ஏக்கள் வந்துள்ளதுபோல முதல்வர் உத்தவ் தாக்கரேவும் விடுமுறைக் காலத்தில் அசாமுக்கு வர வேண்டும்' என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக நேற்றும் செய்தியாளர்களிடம் பேசிய அசாம் முதல்வர் சர்மா, 'அசாமில் நிறைய நல்ல ஹோட்டல்கள் இருக்கின்றன. யார் வேண்டுமானாலும் இங்கு வந்து தங்கலாம். அதில் ஒன்றும் பிரச்னையில்லை. மகாராஷ்டிர எம்எல்ஏக்கள் ஏன் இங்கு வந்து தங்கியுள்ளார்கள் என எனக்குத் தெரியாது. வேறுமாநிலத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்களும் இங்கு வரலாம்' என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க | இந்த ஆட்சியை நிறைவு செய்வோம்: சஞ்சய் ரௌத்