
அசாமிலுள்ள விடுதியில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் (கோப்புப்படம்)
மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 15 பேருக்கு 'ஒய் பிளஸ்' சிஆர்பிஎஃப் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான எம்எல்ஏ-க்கள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால், சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி அரசின் நிலைத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளது. சிவசேனை அதிருப்தி எம்எல்ஏ-க்கள் அசாமில் முகாமிட்டுள்ளனர். இதன்காரணமாக, மகாராஷ்டிரத்தில் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் அலுவலகங்கள் சூரையாடப்பட்டன.
இதையும் படிக்க | அவசர நிலையை மறக்கக் கூடாது: பிரதமர் மோடி
இதைத் தொடர்ந்து, 16 அதிருப்தி எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி சிவசேனை சார்பில் சட்டப்பேரவையின் துணைத் தலைவரிடம் கடிதம் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 16 அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வரும் 27-ம் தேதி மாலைக்குள் இதுதொடர்பாக பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறைந்தபட்சம் 15 அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு சிஆர்பிஎஃப் வீரர்களின் ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மகாராஷ்டிரத்தில் வசிக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இது அடங்கும். மகாராஷ்டிரத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் காரணமாக அவர்களும், அவர்களது குடும்பத்துக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மத்தியப் பாதுகாப்பு அமைப்புகள் அளித்த பரிந்துரையின்பேரில் அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே மும்பை மற்றும் தாணேவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...