பெங்களூரு: கர்நாடகத்தில் கல்விக் கடனை திருப்பி செலுத்த காலதாமதமானதால், இரு சகோதரிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
30 சதவிகித வட்டியில் ஒரு லட்ச ரூபாய் கடனாக பெற்றதற்காக இரு சகோதரிகளையும் அவர்களது வீட்டிற்கே சென்று அவர்களிடம் மூன்று பேர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். மூன்று பேரில் ஒருவர் பெண்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர்ப் பகுதியில் உள்ள தொட்டபொம்மசந்ரா எனும் பகுதியில் வசித்து வருபவர் தனது இரு மகள்களின் கல்வி செலவிற்காக 30 சதவிகித வட்டியில் ரூ.1 லட்சத்தை கடனாகப் பெற்றுள்ளனர்.
நெரிகா கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணா என்பவர் கடனைக் கொடுத்துள்ளார். இந்நிலையில், கடனைக் கொடுத்த ராமகிருஷ்ண ரெட்டி, சுனில் குமார், இந்திரம்மா ஆகியோருடன் பணத்தை திரும்ப கேட்க வந்துள்ளார்.
அப்போது இரு சகோதரிகள் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர். அவர்களிடம் மொத்த பணத்தையும் ராமகிருஷ்ணா திரும்ப கேட்டு வற்புறுத்தியுள்ளார்.
ஒருகட்டத்திற்கு மேல் சகோதரிகள் இருவரையும் அவரது வீட்டில் இருந்த அறையினுள் இழுத்துச்சென்று, உடைகளை கிழித்து, துன்புறுத்தி அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சகோதரிகள் தனது தந்தையுடன் சார்ஜாபூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். ஆனால் காவல் ஆய்வாளர் ராகவேந்திரா, புகார் பதிவு செய்வதற்கு பதிலாக குற்றவாளிகளுடன் சமரசப்பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கடனை திரும்ப கொடுக்குமாறு பாதிக்கப்பட்டவர்களிடம் அறிவுறுத்தியுள்ளார்.
மாணவிகளை துன்புறுத்தும் விடியோ இணையத்தில் வைரலாகி பொதுமக்கள் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, இரு நாள்களுக்கு பிறகு காவல் துறையினரே பாதிக்கப்பட்டவர்களை அழைத்து தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.