ஆளுநருடன் சந்திப்பு; முதல்வராக இன்றிரவு ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பு

பாஜக மூத்த தலைவர் தேவேந்திர ஃபட்னவீஸ் மகாராஷ்டிர மாநில முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக, ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் திருப்பம்: ஆளுநருடன் சந்திப்பு; முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே
திடீர் திருப்பம்: ஆளுநருடன் சந்திப்பு; முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிர மாநில ஆளுநரை  தேவேந்திர ஃபட்னவீஸ், ஏக்நாத் ஷிண்டே  ஆகியோர் சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரினர். அவர்களுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷியாரி இனிப்பு ஊட்டினார்.

பின்னர், பாஜக மூத்த தலைவர் தேவேந்திர ஃபட்னவீஸ் மகாராஷ்டிர மாநில முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக, ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டே இன்று இரவு 7.30 மணியளவில் பதவியேற்பார் என்று ஃபட்னவீஸ் அறிவித்துள்ளார். ஏக்நாத் ஷிண்டே பதவியேற்ற பிறகு, அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும். சிவசேனை மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள். நான் அமைச்சரவையில் இடம்பெற மாட்டேன் என்றும் கூறினார்.

மகாராஷ்டிர மாநிலத்தில், முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், மீண்டும் சிவசேனை ஆட்சி அமையவிருக்கிறது. இந்த அரசுக்கு பாஜக ஆதரவு அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆளுநர் பகத்சிங் கோஷியாரியை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தேவேந்திர ஃபட்னவீஸும், சிவசேனை தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும் மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினர்.

தற்கட்டமாக தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராக பதவியேற்கவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், மகாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் என்று அறிவித்திருப்பது திடீர் திருப்பமாக உள்ளது.



தேவேந்திர ஃபட்னவீஸை கோவாவிலிருந்து மும்பை திரும்பிய ஏக்நாத் ஷிண்டே இன்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்கள் உள்பட தனக்கு 40 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக ஏக்நாத் ஷிண்டே கூறியிருந்தார்.

தனது தலைமையிலான சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான பாஜக அரசுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்றும் ஏக்நாத் ஷிண்டே கூறியிருந்த நிலையில், தற்போது சிவசேனை அரசுக்கு பாஜக ஆதரவு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 

மகாராஷ்டிரத்தில் சிவசேனை-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு நடந்து வருகிறது. அண்மையில், சிவசேனை மூத்த தலைவா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள், அரசுக்கு எதிராகப் போா்க்கொடி தூக்கினா். அவா்கள், அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் உள்ள விடுதியில் ஒரு வாரமாகத் தங்கி ஆளும் கூட்டணி அரசுக்கு நெருக்கடி அளித்து வந்தனா்.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும் மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னவீஸ் ஆளுநா் பகத்சிங் கோஷியாரியை செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்தாா். அப்போது, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தவ் தாக்கரே அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா். ஏக்நாத் ஷிண்டே அணியில் 39 சிவசேனை எம்எல்ஏக்கள் இருப்பதால் ஆளும் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்துவிட்டது என்றும் ஃபட்னவீஸ் கூறினாா்.

இதையடுத்து, மகாராஷ்டிர அரசு பெரும்பான்மையை நிரூபிக்க செவ்வாய்க்கிழமை இரவு ஆளுநா் உத்தரவிட்டாா்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு மீது வியாழக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு சட்டப்பேரவைச் செயலருக்கு ஆளுநா் பகத்சிங் கோஷியாரி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை மறுப்பு தெரிவித்த சில மணி நேரத்தில், ராஜிநாமா முடிவை உத்தவ் தாக்கரே அறிவித்தாா்.

இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, ஆளுநா் மாளிகைக்கு இரவு 11.44 மணிக்குச் சென்ற உத்தவ் தாக்கரே தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநா் பகத் சிங் கோஷியாரியிடம் சமா்ப்பித்தாா். அவருடைய ராஜிநாமாவை ஆளுநா் ஏற்றுக்கொண்டதாக ஆளுநா் மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனா். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com