
பான் கார்டு (கோப்புப்படம்)
நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜூன் 30ஆம் தேதி கடைசி நாளாகும். ஒரு வேளை பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவிட்டால் இன்றே இணைத்து விடுவது நல்லது.
இல்லையென்றால், ஜூலை 1ஆம் தேதி முதல் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் இரண்டு மடங்காகிவிடும். அதாவது ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்படும் என்று மத்திய நேரடி வரி வாரியம் அறிவித்துள்ளது.
நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு பலமுறை நீட்டித்து வந்த நிலையில், தற்போது அதற்கு இறுதிக் கெடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. இனி எனக்கு ஏன் விளம்பரம்? எதிர்க்கட்சிகளுக்கு ஸ்டாலின் பதிலடி
அதன்படி, ஜூன் 30ஆம் தேதிக்குள் ஆதார் - பான் எண்ணை இணைக்க வேண்டும். அவ்வாறு இணைக்க வேண்டுமென்றால், அபராதமாக ரூ.500 செலுத்தி 4 - 5 நாள்களுக்குப் பிறகுதான் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியும். ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த அபராதத் தொகை ரூ.1,000 ஆக அதிகரிக்கப்படுகிறது.
ஏற்கனவே, நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைக்க மார்ச் 31ஆம் தேதிவரை கால அவகாசம் விதிக்கப்பட்டது. அவ்வாறு கடைசி தேதிக்குள் இரண்டையும் இணைக்காதவா்களின் நிரந்தர கணக்கு எண் (பான்) ஏப்ரல் 1ஆம் தேதி முதல் முடக்கப்பட்டது. அதோடு, ஏப்ரல் 1 முதல் 3 மாதங்களுக்கு அல்லது ஜூன் 30-ஆம் தேதி வரை ரூ. 500 அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்பிறகும், நிரந்தர கணக்கு எண்ணையும் ஆதாரையும் இணைக்காதவா்களுக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதத் தொகையை செலுத்திய பிறகே, முடக்கப்பட்ட நிரந்தர கணக்கு எண் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது அபராதத்துடன் தான் இணைக்க முடியும் என்ற நிலையில், அதுவும் நாளை இரண்டு மடங்காகிவிடும். எனவே, அபராதத்தை தவிா்க்க வருமான வரி செலுத்துபவா்கள் இரண்டும் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.