
இனி எனக்கு ஏன் விளம்பரம்? முதல்வர் மு.க.ஸ்டாலின்
ராணிப்பேட்டை: ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் அரசியலில் உள்ள எனக்கு இனி ஏன் விளம்பரம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராணிப்பேட்டையில் புதிதாகக் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்து வைத்துப் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ரூ.400 கோடியில் மாபெரும் காலணி உற்பத்தி பூங்கா தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
ராணிப்பேட்டையில் இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், 50 ஆண்டுகளுக்கும் மேல் அரசியலில் உள்ள எனக்கு இனி ஏன் விளம்பரம் என்று கேள்வி எழுப்பினார்.
அதாவது, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளிக்கும் வகையில் அவ்வாறு கூறினார்.
நரிக்குறவர் வீட்டுக்குச் சென்று விளம்பரம் தேடிக் கொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்ததற்கு பதிலளித்த ஸ்டாலின், நரிக்குறவர் இன மக்களுக்கு திமுக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் அரசியலில் உள்ள எனக்கு இனி ஏன் விளம்பரம்.
திமுக அரசு ஆட்சிக்கு வந்த போது, முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட பள்ளி புத்தகப் பைகள் வழங்கப்படாமல் இருந்தன. அவற்றை அளிக்க வேண்டாம் என்று கூறினார்கள். ஆனால், அவற்றை பயன்படுத்தாமல் போனால் 17 கோடி ரூபாய் அரசுக்கு வீண் செலவு ஏற்படும். பணம் வீணாகும். பரவாயில்லை முன்னாள் முதல்வர்களின் படங்களுடனே பைகளை வழங்கலாம் என்று கூறினேன். இது பற்றி தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். விளம்பரம் எனக்குத் தேவையில்லை. விளிம்பு நிலை மக்களுக்குத் தேவையான அனைத்தையும் தமிழக அரசு செய்து வருகிறது.
போய்ச் சேர வேண்டிய இடத்துக்குச் செல்ல கையில் காசில்லையே என்று கலங்கி நிற்கும் போது, செலவில்லாமல் பேருந்தில் ஏறிச் செல்லும் பெண்களுக்கு என் முகம்தான் நினைவில் வரும். பிறகு எனக்கு ஏன் விளம்பரம் என்றும் ஸ்டாலின் கூறினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...