உக்ரைனிலிருந்து கர்நாடக மாணவரின் உடலை கொண்டு வருவது குறித்த கேள்வி பாஜக எம்எல்ஏ அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனில் பலியான கர்நாடக மாணவரின் உடலைக் கொண்டு வருவதற்கு பதிலாக, அந்த இடத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை நிற்க வைத்து அழைத்து வரலாம் என்று பாஜக எம்எல்ஏ அரவிந்த் பெல்லாட் கூறியிருப்பது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
ரஷியாவின் குண்டு வீச்சில் பலியான கர்நாடகத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் நவீன் ஷெகாரப்பாவின் உடலை கொண்டு வருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு எம்எல்ஏ இவ்வாறு பதிலளித்திருந்தார்.
விமானங்களில், இறந்தவரின் உடலைக் கொண்டு வர அதிக இடம் தேவைப்படும். ஒரு உடலைக் கொண்டு வரத் தேவைப்படும் இடத்தில் சுமார் 8 மாணவர்களை உயிரோடு தாயகம் அழைத்து வரலாம் என்று கூறியிருந்தார்.
மேலும், நவீனின் உடலைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு போர் நடந்து கொண்டிருப்பதால், உயிரோடு இருப்பவர்களை அழைத்து வருவதே மிகவும் சிரமமாக இருக்கும் நிலையில், இறந்தவரின் உடலைக் கொண்டு வருவது மிகவும் கடினமானப் பணி என்றும் கூறியுள்ளார்.