உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி என அனைத்துக் கட்சிகளின் முதல்வர் வேட்பாளர்களும்
தோல்வியையே சந்தித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை
தொடங்கி நடைபெற்று வருகிறது. உத்தரகண்டில் அனைத்துக் கட்சிகளின் முதல்வர் வேட்பாளர்களும் தோல்வியைடைந்துள்ளனர்.
கதிமா தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் புஷ்கர் சிங் தாமி காங்கிரஸ் வேட்பாளர் புவன் சந்திடம் தோல்வியடைந்துள்ளார். தாமியை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 52 சதவிகித (44,479) வாக்குகளைப் பெற்றார். தாமி 37,425 வாக்குகளைப் பெற்றார்.
இதையும் படிக்க | சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய முன்னாள் முதல்வர்கள்
லால்குவான் தொகுதியில் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹரிஷ் ராவத் பாஜக வேட்பாளர் மோகன் சிங்கிடம் 14 ஆயிரம்
வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மோகன் சிங் 53 சதவிகித (44,851) வாக்குகளைப் பெற்றுள்ளார். ஹரிஷ் ராவத் 28,251 வாக்குகளைப்
பெற்றுள்ளார்.
ராவத் தோல்விக்கு முக்கியக் காரணம் காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளர் சந்தியா தலகோடி எனக் கூறப்படுகிறது. லால்குவான் தொகுதியில் முன்பு
தலகோடியை நிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. ஆனால், இறுதியில் ஹரிஷ் ராவத்தே அந்தத் தொகுதியில் களமிறக்கப்பட்டார். இந்த மாற்றத்தால்
அதிருப்தியடைந்த தலகோடி சுயேச்சையாகப் போட்டியிட்டார்.
கங்கோத்ரியில் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் அஜய் கோதியால் 5,998 வாக்குகளை மட்டுமே பெற்று பாஜகவின் சுரேஷ் சந்திர சௌஹானிடம்
(28,667 வாக்குகள்) தோல்வியடைந்தார்.