5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் முன்னாள் முதல்வர்கள் பலர் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகின.
இதையும் படிக்க | மீிண்டும் முதல்வராகும் யோகி ஆதித்யநாத்: கோராக்பூர் தொகுதியில் வெற்றி
இதில் பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தில் முன்னாள் முதல்வர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சரண்ஜித் சிங் சன்னி பாதார், சாம்கவுர் சாகேப் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். எனினும் இரண்டு தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளார்.
அதேபோல் பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்வரான அமரீந்தர் சிங் (20105 வாக்குகள்) ஆம் ஆத்மி வேட்பாளர் அஜித் கோலியிடம் (33142 வாக்குகள்) தோல்வியைத் தழுவினார்.
பஞ்சாப் மாநிலத்தைத் தவிர்த்து உத்தரகண்ட் மாநிலத்திலும் முதல்வராக பதவி வகித்தவர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத் பாஜக வேட்பாளர் மோகன் சிங் பிஷ்டிடம் தோல்வியைத் தழுவியுள்ளார்.
அதேபோல் ஹதிமா தொகுதியில் போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் புவன் கப்ரியிடம் தோல்வியைத் தழுவியுள்ளார்.