பஞ்சாபில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதையடுத்து, முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலை இன்று தில்லியில் சந்தித்தார்.
பஞ்சாபில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 92 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்துள்ளது.
இதையடுத்து, பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலை இன்று தில்லியில் சந்தித்து வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டார். அப்போது தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் உடனிருந்தார். தில்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பகவந்த் மான், பதவியேற்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
இதையும் படிக்க | பஞ்சாப் கிராமத்தில் பதவியேற்பு விழா: பகவந்த் மான்
முன்னதாக, பஞ்சாபில் புதிய அரசின் பதவியேற்பு விழா, ஆளுநா் மாளிகைக்குப் பதிலாக சுதந்திரப் போராட்டத் தியாகி பகத் சிங் பிறந்த ஊரான கத்கா் கலன் கிராமத்தில் நடைபெறும் என அக்கட்சியின் மாநிலத் தலைவரும் முதல்வா் வேட்பாளருமான பகவந்த் மான் கூறியுள்ளாா்.
பஞ்சாப் தேர்தலில் முன்னாள் முதல்வர்கள் சரண்ஜித் சிங் சன்னி, பிரகாஷ் சிங் பாதல், அமரீந்தர் சிங் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் தோல்வி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.