காங்கிரஸ் தலைமை ஒருபோதும் கற்றுக்கொள்ளாது என பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது குறித்து பஞ்சாப் முன்னாள் முதல்வரும் காங்கிரஸின் முன்னாள் மூத்தத் தலைவருமான அமரீந்தர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில்,
'காங்கிரஸ் தலைமை ஒருபோதும் கற்றுக்கொள்ளாது!
உ.பி.யில் காங்கிரஸின் அவமானகரமான தோல்விக்கு யார் காரணம்? மணிப்பூர், கோவா, உத்தரகண்ட் முடிவுகள் என்ன ஆயிற்று?
இதற்கான பதில் சுவரில் பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள்(காங்கிரஸ்) அதனை ஒருபோதும் படிப்பதில்லை என்றே நான் கருதுகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
அமரீந்தர் சிங் காங்கிரஸில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கி நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டு ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. அதுபோல, அமரீந்தர் சிங், தான் போட்டியிட்ட பாட்டியாலா தொகுதியில் தோல்வியைத் தழுவியுள்ளார். பாஜக 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாபில் 117ல் 92 இடங்களைப் பிடித்து ஆம் ஆத்மி முதல்முறையாக ஆட்சியமைக்கிறது. காங்கிரஸ் 18 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது கட்சியாக உள்ளது.