பஞ்சாப் முதல்வராக பதவியேற்றுக்கொண்ட பகவந்த் மானுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து பகவந்த் மான், கடந்த சனிக்கிழமை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆட்சியமைப்பதற்கு உரிமை கோரினார் .
அதன்படி, பகத் சிங்கின் ஊரான கட்கட் களானில் நடைபெற்ற விழாவில், பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
முதல்வராகப் பதவியேற்றுள்ள பகவந்த் மானுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், மாநில முதல்வர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி, 'பஞ்சாப் முதல்வராக பதவியேற்றுள்ள பகவந்த் மானுக்கு வாழ்த்துகள். பஞ்சாபின் வளர்ச்சிக்காகவும், மாநில மக்களின் நலனுக்காகவும் இணைந்து செயல்படுவோம்' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.