பகத் சிங்கின் ஊரான கட்கட் களானில் நடைபெற்ற விழாவில், பஞ்சாப் முதல்வராக ஆம் ஆத்மியின் பகவந்த் மான் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
பஞ்சாப் மாநிலத்தின் 17வது முதல்வராக பதவியேற்கும் பகவந்த் மானுக்கு பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் கலந்து கொண்டார்.
பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை அவருடைய மாளிகையில் சனிக்கிழமை சந்தித்து ஆட்சியமைப்பதற்கு உரிமை கோரினார் பகவந்த் மான்.
இதையும் படிக்க.. தந்தை-மகனை ஒன்று சேர்த்த பஞ்சாப் முதல்வர் பதவியேற்பு விழா
பதவியேற்பு விழாவானது பகத் சிங்கின் கிராமமான கட்கட் களானில் இன்று நடைபெற்றது. அவருடன் 16 எம்எல்ஏ-க்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்விற்காக 100 ஏக்கர் பரப்பளவில் விழா அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.
பதவியேற்பு விழாவில், ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு தலைவர்களும் பங்கேற்றனர்.