
உச்சநீதிமன்றம்
புது தில்லி: தந்தையுடன் உறவை பேண விரும்பாத மகள், அவரிடமிருந்து செலவுக்கு பணம் பெற எந்த உரிமையும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கௌல், எம்எம் சுந்ரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒரு தம்பதிக்கு திரும்ப இணைய வாய்ப்பில்லாத நிலையில் விவாகரத்து வழங்கி அளித்த உத்தரவின் மீது இது குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், கணவர், இறுதி மற்றும் முழு இழப்பீடாக மனைவிக்கு ரூ.10 லட்சத்தை இரண்டு மாதத்துக்குள் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். பணம் செலுத்தப்பட்டு 1 மாதத்துக்குள் மனைவி அந்த தொகையை கோராவிட்டால், அது நிரந்தர வைப்புத் தொகையாக வைக்கப்பட்டு 91 நாள்களுக்குப் பிறகு புதுப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. காலநிலை மாற்றம் நம்மை என்ன செய்யும் என்று கேட்பவர்களுக்கு..
இந்த வழக்கில் மகளின் கல்வி மற்றும் திருமண செலவுகள் குறித்து கவனத்தில் கொள்ளப்படுகிறது. ஆனால், தந்தையுடன் மகள் எந்த உறவையும் பேண விரும்பவில்லை என்பதும், தற்போது அவருக்கு 20 வயது நடக்கிறது என்பதையும் அறிய முடிகிறது.
மகள் தனது வாழ்க்கையை தீர்மானிக்கும் வயதை அடைந்து விட்டார் மேலும், அவர் தந்தையிடமிருந்து கல்விக்காக எந்த உதவியையும் கோர முடியாது. அதேவேளையில், மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.