4 மாநிலங்களில் வென்றும் ஆட்சி அமைக்கவில்லை: பாஜகவை விமர்சித்த கேஜரிவால்
நான்கு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று இன்னும் பாஜக ஆட்சி அமைக்கவில்லை என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அரவிந்த் கேஜரிவால் பேசியதாவது, ''5 மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 4 மாநிலங்களில் வெற்றி பெற்றது. எனினும் பாஜகவில் உள்கட்சி பூசல் நிலவுவதால், வெற்றி பெற்ற மாநிலங்களில் இன்னும் ஆட்சி அமைக்க முடியவில்லை.
பஞ்சாபில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியினர் உடனடியாக ஆட்சி அமைத்துள்ளனர். அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் உடனடியாக பொறுப்பேற்றுக்கொண்டனர். பஞ்சாப் அரசும் திறம்பட செயல்பட ஆரம்பித்துள்ளது.
பகவந்த் மான் சிங்கின் உழைப்பை நாடே பெருமையாக பேசி வருகிறது. விவசாயிகளுக்கு அக்டோபர் மாதத்தில் நேர்ந்த பயிர் சேதங்களுக்கான இழப்பீடு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து விவசாயிகளுக்கும் அவை வழங்கப்படும்'' என்று கூறினார்.