மொத்த வாடிக்கையாளர்களுக்கு டீசல் விலை லிட்டருக்கு  ரூ.25 அதிகரிப்பு

மொத்தமாக டீசலை கொள்முதல் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அதன் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மொத்தமாக டீசலை கொள்முதல் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அதன் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளது.

சில்லறை விற்பனைக்கான விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. 
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதன் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. அதே வேளையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை 136 நாள்களாக மாற்றமின்றி நீடிக்கிறது. உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தல் நடைபெற்றதன் காரணமாகவே எரிபொருள் விலை மாற்றப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்தன. தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் என பல்வேறு தரப்பினரும் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாள்கள் ஆகிவிட்டபோதிலும் பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது.

இந்நிலையில், அதிக அளவில் டீசலை கொள்முதல் செய்யும் தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் அதன் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளது. மும்பையில் ரூ.94.14-ஆக இருந்த ஒரு லிட்டர் டீசல் விலை, மொத்த வாடிக்கையாளர்களுக்கு தற்போது ரூ.122.05-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தில்லியில் டீசல் விலை ரூ.86.67-இல் இருந்து ரூ.115-ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலமாக மாநில போக்குவரத்துக் கழகங்கள், வணிக வளாகங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்படவுள்ளன.

மொத்தமாக டீசலை கொள்முதல் செய்பவர்களுக்கு மட்டும் தற்போது விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் எரிபொருள் நிறுவனங்களிடமிருந்து நேரடியாக டீசலை வாங்காமல், எரிபொருள் நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று எரிபொருளை வாங்கக் கூடும் என்றும், அதன் காரணமாக அந்நிறுவனங்களின் இழப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com