முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பணிகளைச் செய்ய கேரள அரசு ஒத்துழைக்காவிட்டால் தமிழகம் நீதிமன்றத்தை நாடலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் நீரைத் தேக்கும் விவகாரம் தொடர்பாகவும், அணையின் பாதுகாப்பு தொடர்பாகவும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், ஏ.எஸ்.ஒகா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணையில் இருந்து வருகிறது.
இன்று(வியாழக்கிழமை) நடைபெற்ற விசாரணையில், முல்லை பெரியாறு அணை தொடர்பான மேற்பார்வைக் குழுவை தொழில்நுட்பக் குழுவாக மாற்ற பரிந்துரை செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் இந்த தொழில்நுட்பக்குழு பரிந்துரை செய்வனவற்றை அந்தந்த மாநில அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக குழு வேண்டுமெனில் உத்தரவு பிறப்பிக்கலாம் என்றும் கூறினர்.
அப்போது தமிழக அரசு தரப்பில், 'அணை பணிகளைச் செய்ய கேரள காவல்துறை எல்லைக்குள் செல்லவிருப்பதால் அந்த மாநில அரசு அனுமதி மாறுகிறது' என்று கூற, அதற்கு நீதிபதிகள், 'முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பணிகளைச் செய்ய கேரள அரசு ஒத்துழைக்காவிட்டால் தமிழகம் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம்' என தெரிவித்தனர்.
முல்லை பெரியாறு அணையை பலப்படுத்த எந்தவிதத்திலும் தயாராக இருக்கிறோம் எனவும் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.