அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே செயல்படும் என்று மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் அறிவித்துள்ளார்.
மணிப்பூர் முதல்வராக இரண்டாவது முறையாக பிரேன் சிங் பொறுப்பேற்றுக்கொண்டதைத் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார்.
விடுமுறை தொடர்பாக மணிப்பூர் துணைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மணிப்பூரில் அரசு அலுவலகங்கள், ஏஜென்சிகள், பொதுத்துறை நிறுவனங்கள் என அனைத்தும் வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே இனி செயல்படும். அரசு விடுமுறை நாள்கள் கணக்கில் கொள்ளப்படாது.
கோடை காலத்தையொட்டி மார்ச் முதல் அக்டோபர் முதல் அரசு அலுவலகங்களுக்கு காலை 9 முதல் 5.30 மணி வரை பணி நேரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மழைக்காலத்தையொட்டி நவம்பர் முதல் பிப்ரவரி வரை அரசு அலுவலக நேரம் காலை 9 முதல் மாலை 5 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடையில் பிற்பகல் 1 முதல் 1.30 மணி நேரம் உணவு இடைவேளையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்று பள்ளிகள் காலை 8 மணிக்குத் தொடங்கும் என்றும், வகுப்புகளின் எண்ணிக்கையைப் பொறுத்து பள்ளிகள் செயல்படும் நேரத்தை அந்தந்த பள்ளிகள் நிர்ணயித்துக்கொள்ளலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மணிப்பூரில் 60 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தலில் 32 இடங்களைக் கைப்பற்றி பாஜக வெற்றி பெற்றது. இதனையடுத்து பாஜக உயர்மட்ட ஆலோசனையில் பிரேன் சிங் முதல்வராக நியமிக்கப்பட்டு கடந்த 22ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.