பிகார் மாநிலம் லாகிசராய் மாவட்டத்தில் வீட்டின் பின்புறத்தில் வைக்கப்பட்டிருந்த குறைந்த திறன் கொண்ட வெடிகுண்டுகள் வெடித்ததில் சிறுவன் உள்பட 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் மேலும் மூன்று வெடிகுண்டுகளை வீட்டின் பின்புறம் கண்டறிந்துள்ளனர்.
பிகார் மாநிலம் லாகிசராய் மாவட்டத்திலுள்ள வாலிபூர் கிராமத்தில் லூடான் ரஜாக் என்பவருக்குச் சொந்தமான வீட்டின் பின்புறம் இச்சம்பவம் நடந்துள்ளது.
இது தொடர்பாக பேசிய மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுஷில் குமார், காலை ஏழு மணியளவில் வீட்டின் பின்புறத்தில் வெடிகுண்டுகள் வெடித்துள்ளன.
பிளாஸ்டிக் பைகளில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகளை வீட்டில் இருந்த சிறுவன் எடுத்துள்ளான். அதனை பிரித்த சிறு நொடிகளில் வெடிகுண்டுகள் வெடித்துள்ளன. இதில் சிறுவன் உள்பட அருகில் இருந்த குடும்பத்தார் 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் காவல் துறையினர், வீட்டின் பின்புறம் மேலும் மூன்று வெடிகுண்டுகளைக் கண்டறிந்துள்ளனர் என்று கூறினார்.