கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு மத அரசியலை முன்வைத்து, ஹிந்து கோயில்களில் நடைபெறும் முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிரான அநீதிகளுக்கு மெளனம் காப்பதாக பாஜகவைச் சேர்ந்த சட்ட மேலவை உறுப்பினர் எச்.விஸ்வநாதன் விமர்சித்துள்ளார்.
ஹிந்து கோயில்களில் முஸ்லிம் வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர்களுக்கு அனுமதி மறுத்தது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தீண்டாமையை ஊக்குவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் உடுப்பி, தக்ஷின கன்னடா, சிவ்மோகா ஆகிய பகுதிகளிலுள்ள ஹிந்து கோயில் நிர்வாகங்கள், முஸ்லிம் வியாபாரிகள், விற்பனையாளர்கள் வணிகம் செய்வதற்கு அனுமதி மறுத்துள்ளது.
கோயில் நிர்வாகங்களின் இந்த நடவடிக்கைக்கு கர்நாடக அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய எச்.விஸ்வநாதன், மற்ற நாடுகளிலும் முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் உணவுகளையும், பூக்களையும் விற்பனை செய்கின்ற்னர். அது எப்படி பிரச்னையாகும். அது அவர்களின் வணிகம். முஸ்லிம் மக்கள் எதை உண்பார்கள். ஹிந்துவோ முஸ்லீமோ, பசியுள்ள வயிறு எழுப்பும் கேள்வி இது. இவ்வாறு செய்வது தீண்டாமை என்று குறிப்பிட்டுள்ளார்.